மனிதனோடு மறந்திருக்கும் உண்மைகள் !

Posted by Justin Jeevaprakash | | Posted On Friday, March 3, 2023 at 5:13 PM


இரகசியம் என்பது என்றுமே நிரந்தரம் இல்லாத ஒன்றாகக் காலத்தின்  பிரசவத்தில் அவ்வப்போது பிறக்கின்றது.  ஒவ்வொரு     இரகசியமும்    சரியான     நேரம், இடம்,  மற்றும்  சரியான  மனிதருக்காகக் காத்திருக்கிறது. அறிவியல் உலகிலும் இப்படித்தான்; சமய உலகிலும் இப்படித்தான். அகநிலை அறிவியல் பற்றியும், உள்ளார்ந்த மனித விஞ்ஞானம் பற்றியும் பல நாடுகளில் நடந்துள்ள ஆய்வுகளைப் பார்க்கும் போதும் மனம் திகைத்துதான் போகிறது. நம்மிடத்தில் ஒரு சாவி இருக்கிறது. அந்தச்  சாவியிலிருந்து  அதன்  கருவூலத்தைத் திறந்து காணலாம் என்பதையும் கற்பனை  செய்ய  வழியில்லை. செல்வம் இருப்பதற்கான அடையாலம் எதுவும் சாவியில் இல்லை. சாவியே ஒரு பூட்டாக மூடிக்கிடக்கிறது   என்கிறார் ஓஷோ. ஆம் அந்தச் சாவியை துண்டு துண்டாக உடைத்தாலும் அது உலோகம் என்று தெரியுமே தவிர, அதிலிருந்து வெளிப்படப் போகும் செல்வம் என்னவென்று அறிந்து கொள்ள முடியாது.  எந்த விதமான குறிப்பும் இல்லாத சாவி ஒன்றை, நெடுங்காலம்             வைத்திருப்பது        வெறும்          சுமையாகவே ஆகிவிடும்.
இந்த சுமையை  நம்முடையே    பலர்  
வைத்துக்            கொண்டுதான்       உலா        வந்து கொண்டிருக்கிறோம். 
இருந்தும்    அதை  தூக்கி     எறிந்துவிடும்    எண்ணம் நமக்கு ஏற்படவில்லை காரணம் ஒரு பூட்டை என்றாவது ஒரு நாள் அது திறக்கக்கூடும் என்ற நம்பிகை! இந்தத் தேடலின் கண்டுப்பிடிப்புதான் இன்றைய நம் உலகம். பல சாவிகலால் திறக்கப்பட்டு கட்டவிழ்க்கப்பட்ட ஒரு மாபெரும் சக்திதான் இன்றைய உலகம்  என்று கூறினால் அது சொல்லத்தகுந்தது. மனிதன் ஆதியிலிருந்து இன்று வரை தனது விடாமுயற்சியாலும் திருப்தியின்மையாலும் தனது தேடலின் முடிவாலும் நாளுக்கு நாள் அதிநவீன மாற்றங்களைக் கண்டுப்பிடித்து வருகிறான்.  இதற்கு காரணம் தான் வைத்திருந்த சாவிக்கு ஏற்ற பூட்டைக் கண்டுப்பிடித்ததால். சில சமயங்களில் தான் வைத்திருந்த சாவிக்கு ஏற்ற பூட்டை கண்டுப்பிடிக்காமல் போவதும் உண்டு. ஆனால் அது தொடர் முயற்சியாக ஆடுத்தவரின் தேடலுக்கு உட்பணிந்து போவதும் உண்டு. இதுவே பல கண்டுப்பிடிப்புகளின் பரினாமம் என்று கூறவே விரும்புகிறேன். எந்த அளவிற்கு   நாம் நம்முடைய  எண்ணத்தையும்  சொல்லையும் செயலையும் செயலாக்கத்திற்கு கொண்டு வருகிறோமோ  அந்த அளவிற்கு  நம்மால் வெற்றியடைய முடியும். முடியாது முடியாது என்பவனும் , அது இல்லை, இது இல்லை என்பவனும் மரக்கட்டைக்கு ஒப்பானவன் என்கிறார் ஒரு பிரஞ்ஜு அறிஞர். உலகில் உள்ள அனைத்தும் நம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும்   அமைந்துள்ளது. அது போல ஒரு மனிதனின் உயர்வும் தாழ்வும் அவனின் நம்ப்பிக்கையின் அடிப்படையிலும்  விடாமுயற்சி எனும் தொடர் செயலாலும் நடைப்பெறுகிறது.   அவற்றைப்  பயன்படுத்தி   வாழ்க்கையில் எது வேண்டுமோ அதை நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும்   செயல்பட்டு   நம்மிடம் இருக்கும் சாவிக்கான பூட்டைத் தேடிக் கண்டுப்பிடிப்போம்!  நன்றி.

தொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்

Posted by Justin Jeevaprakash | | Posted On Monday, February 27, 2023 at 3:45 PM


மொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன் வடிவமாக உள்ள இலக்கணமும் அதன் தொடக்கத்திலிருந்து இலக்கியத்தோடு இணைந்திருந்ததினால் மொழியியல் இலக்கியத்தோடு நெருக்கம் கொண்டிருப்பது உண்மையாகிறது. பரந்த நோக்கில் பார்க்கும்போது, மொழியியல் என்பது மனிதனால் பேசப்படும் மொழியைப்பற்றி ஆராய்யும் ஒரு துறையாகும். மொழியியலைப் பற்றி நம் தமிழ் ஆய்வலர்களில் ஒருவரான இளம்பூரணர், தொலகாப்பியம் உணர்த்தும் மொழியியல் கூறுகளே தமிழின் வளர்ச்சியையும் அதன் ஒலிக்கூறுகள் மற்றும் மொழிக்கூறுகளின் அமைப்புகளையும் விளக்கப்படுத்துகிறார். தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் தொல்காப்பியம்என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். இதுவே தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.

(மூலம் :ta.wikipedia.org )

     தொல்காப்பியம் மூன்று அதிகாரங்கள் கொண்டதாகும் முதலாவதாக உள்ளது எழுத்ததிகாரம். இதில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவதாக உள்ளது  இயல் மொழிமரபு. மொழி எனப்படுவது நாம் மேலே பார்த்ததுப்போல் பேசப் பயன்படகூடிய ஒரு சாதனமாகும். அதற்கு நாம் எழுத்து வடிவமும் உருவாக்கிக் கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவதே சொல்லாகிறது. எனவே இங்கு    மொழி எனப்படுவது மொழியப்படும் சொல்லைக் குறிப்பதாகிறது. மரபு என்பதோ இவ்விடத்தில் பின்பற்றும் வழக்கத்தை குறிப்பனவையாகும். ஆகவே, முதலாவது இயல் முதலெழுத்துகளை விளக்கப்படுபவையாகவும் இரண்டாவது இயல் சார்பெழுத்துக்கள், மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்களை விளக்கப்படுத்துபவையாகவும் விளங்குகிறது. இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரங்களும் ஒன்பது இயல்கள் கொண்டதாகும். எழுத்ததிகாரத்துக்குள் நூன் மரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்கள் அடங்குகின்றன:::

எழுத்ததிகாரம்

எழுத்ததிகாரத்தில் தொல்காப்பியர் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடைகளைத் தருபவனாக எழுத்ததிகாரம் விளங்குகிறது என்கிறார்ர்.

1.       எழுத்துகள் எங்ஙனம் பிறக்கின்றன?

2.       சொற்கள் பிற சொற்களோடு எங்ஙனம் புணருகின்றன?

3.       புணரும்போது சொற்கள் எங்ஙனம்  மாறுகின்றன?

4.       பெயர்சொற்கள் வேற்றுமை உருபுகளை எங்ஙனம் ஏற்கின்றன?

5.       அவற்றை ஏற்கும்போது எங்ஙனம் வேறுபடுகின்றன?

6.       சாரிகைகள் எவ்வாறு அமைகின்றன?

7.      உயிரையும் மெய்யையும் ஈறாகக் கொண்ட சொற்கள் பிறச்சொற்களோடு கலக்கும்போது இடையில் என்ன எழுத்துகள் மிகுகின்றன?

8.      குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்போது எத்தகைய மாறுதல்கள் அடைகின்றன?


எழுத்து என்ற பிரிவில் தனிநின்ற எழுத்து, சொல்லிடை வரும்போது அவ்வெழுத்தின் நிலை, எழுத்துக்களின் உச்சரிப்பு நிலை, சொற்களின் எழுத்துக்கள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் புணரும்போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அ. எழுத்துக்களின் வகைகள்

   எழுத்து எனப்படுப,
     அகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது என்ப


விளக்கம் : உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் சேர்ந்து, முப்பது எழுத்துக்கள் ஆகும்.

      ஔகார இறுவாய்ப்,
    பன்னீர் எழுத்தும் உயிர்என மொழிப.


விளக்கம் : பிற ஒலிகளின் துணை இல்லாமல் தாமே இயங்கிக் கொள்வது உயிர் எழுத்துக்களாகும். அவை மற்ற மெய்யெழுத்துகளையும் இயக்க கூடியது. நம்முடைய உயிரைப் போல, தானே இயங்கவும், இயக்கவும் செயல்படுகின்ற காரணத்தாலும், அ முதல் ஔ வரை உயிரெழுத்து எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என தொல்காப்பியர் கூறுகின்றார்.

       னகார இறுவாய்ப்
     பதினெண் எழுத்தும் மெய்’. என மொழிப.


விளக்கம் : தன்னால் இயங்க முடியாது. பிற உயிர் ஒலிகளின் துணை கொண்டே இயங்க வல்லதாகும். நம்முடைய உடம்பினைப் போல, தானே இயங்கவும் இயக்கவும் முடியாத காரணத்தால் இதற்கு மெய்யெழுத்து எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என தொல்காப்பியர் கூறுகின்றார் அவை க், ச்,ட், த், ப், ர், ய், ற், ல், வ், ழ், ள், ங், ஞ், ந், , ம், ன் -  எனப் பிரிக்கப்பட்டு மெய்யெழுத்துக்களாக கருதப்படுகிறது. சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையாகும். அவை, குற்றியலிகரம், குற்றியலுகரம் மற்றும் ஆய்தமாகும். இவற்றே சார்பெழுத்துக்கள் எனவும் கூறுகிறார்.

ஆ. எழுத்துகள் பிறக்கும் விதம் (ஒலிகளின் பிறப்பு)


                தமிழில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் தொல்காப்பியரோ தம்முடைய தொல்காப்பிய இலக்கண நூலில் உள்ள பிறப்பியல்இலக்கணத்தைப் பற்றி  கூறுகின்றார். உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருத்தி, உதடு, நாக்கு, பல், மேல்வாய்(அண்ணம்) ஆகியாவையின் இயக்கங்களினால் வெவ்வேறு ஒலிகலாய் பிறக்கின்றன என்ற இவர் கூறும் பிறப்பு இலக்கணம் இன்றைய மொழியியலார் பெரிதும் போற்றுகின்றனர். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் ஒலிகளின் பிறப்பை ஆராய்ந்து பார்க்கும்போது தொல்காப்பியர் பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறப்பியலில் சொன்ன கருத்துக்கள் பெரும்பாலும் ஒத்துப் போவனவாகவே உள்ளன. தொல்காப்பியர் தனது இலக்கண நூலில்:-

        உந்தி முதலா முந்து வளி தோன்றி,
       தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,
       பல்லும், இதழும், நாவும், மூக்கும்,
       அண்ணமும், உளப்பட எண் முறை நிலையான்
       உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி,
       எல்லா எழுத்தும் சொல்லும் காலை,
       பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
       திறப்படத் தொ¢யும் காட்சியான.

என்ற நூற்பாவில் ஒலிகலின் பொதுப்பிறப்பு இலக்கணம் கூறுகிறார். இந்நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர், ‘’ தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் பிறப்பினது தோற்றரவைக் கூறுமிடத்து, கொப்பூழ் அடியாகத் தோன்றி முந்துகின்ற உதானன் என்னுங் காற்றுத் தலையின்கண்ணும் மிடற்றிகண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலப்பெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் என்ற ஐந்துடனே, அக்காற்று நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங்கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையோடு கூடிய உறுப்புகளோடு ஒன்றுற்று இங்ஙனம் அமைதலானே, அவ்வெழுத்துகளது தோற்றரவு வேறுவேறு புலப்பட  வழங்குதலை உடைய’’ என்று கூறுகின்றார். கொப்பூழ் அடியில் உதானன் என்ற காற்றுத் தோன்றி வருகின்றது என்பது இன்றைய அறிவியல் ஆராய்ச்சிக்கு மாறானது. நெஞ்சில் உள்ள சுவாசப்பையில் இருந்தே காற்ருப் புறப்படும். அக்காற்று மிடற்றின் ஊடகச் சென்று வாய்க்கு அல்லது வாய்க்கும் மூக்குக்கும் வருகின்றது என இன்றைய மொழியியலார்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இக்காற்றானது தலைக்கும் செல்கிறது எனக்கூறும் தொல்காப்பியர், தலை என்று கூறியிருப்பது எதைப்பற்றி எனத் தெரியவில்லை. ஆனால் தலைக்கு இக்காற்றுச் செல்வதில்லை என்கின்றனர் இக்கால மொழியியலாளர்கள். தொல்காப்பியர் உயிரெழுத்துகளின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது, ‘பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்என்று கூறுகிறார். இதனை அவர்;

           அவ் வழி,
           பன்னீர்-உயிரும் தம் நிலை தி¡¢யா,
           மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.

என்ற நூற்பாவில் குறிப்பிடிகின்றார். எனவே, உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியரும் இக்கால மொழியியலார்களின் கருத்துகளும் பெருதும் ஒத்தே காணப்படுகின்றன. எனலாம்.

இ. எழுத்துக்களின் அளவு

        எழுத்துகளின் அளவு (மாத்திரை) பற்றிய கருத்துகளிலும் இலக்கண நூல்களிடையே சில வேறு பாடுகள் இருந்தே வருகின்றன. குறில் 1, நெடில் 2, மெய், ஆய்தம், குற்றியலிகரம் மற்றும் குற்றியலுகரம் ஆகியவை 1/2 மாத்திரை எனும் அளவுகளில் வேறுபாடில்லை. உயிரளபெடையைத் தொல்காப்பியர் நெடிலும் குறிலும் சேர்ந்த இணைப்பாகக் கருதுகிறார். பின் வந்த நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் அதனைத் தனி எழுத்தாகக் கொண்டு இரண்டு மாத்திரைக்கும் அதிகமான அளவு பெறும் எனக் கூறுகின்றன. மேலும், ஒற்றளபெடை 1 மாத்திரை பெரும் எனக்கூற, தொல்காப்பியரோ ஐகாரக் குறுக்கம் ஒரு மாத்திரை பெறும் என்கிறார். ஒரு மாத்திரையாக ஒலிப்பதுதான் நிலைப்படி சரியானது என இன்றைய மொழிநூலார்களும் கூறுகின்றனர். ஔகாரக் குறுக்கம் பற்றித் தொல்காப்பியர் கூறவில்லை. நன்னூல் இலக்கண விளக்கமும் முத்து வீரியமும் அவை 1 மாத்திரைப் பெறக்கூடியது எனவும் வீரசோழியம் மற்றும் நேமிநாதம் ஆகியவை 1 1/2 மாத்திரை பறும் எனவும் குறிப்பிடுகின்றன. மொழியியலார்கலோ ஔகாரக் குறுக்கம் என ஒன்று இல்லை என்றே கருதுகின்றனர். மீண்டும் இங்கு தொல்காப்பியரின் கருத்தே உறுதிப்படுகிறது.


   


            

ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்? – பாரதி ஒரு பார்வை!

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, January 12, 2023 at 9:07 PM

         கவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கூடு விட்டு கூடு பாய்தலுக்கு ஒப்ப ஏற்றுணர்வும் உடையவனாக ஒரு கவிஞன் இருக்க வேண்டும் என்பதே பாரதியின் கொள்கையாகும் என்கிறார் அ.அ. மணவாளன். பிறரது துன்பத்தைக் காணும் போது தனக்கே நேர்ந்தாற் போல் உண்மையான கவிதையைப் படைக்கக்கூடியவனாக இருப்பான் கவிஞன். அதுவே, யாப்பிலக்கணம் படித்துக் கவிதை எழுதக்கூடியவன் பதங்களோடு அவற்றைப் பின்னும் திறன் படைத்தவனாக இருக்கக்கடவான் எனும் பாரதியின் கருத்தை அறியும்போது அவனுடைய கவிதைக் கொள்கையின் ஆதர்சம் எதுவென எளிதில் புரிந்து கொள்ளலாம். பிறர் துயரைக் களைவதுதான் அந்த மாகவியின் இலக்கிய நோக்கமாகும்.

          நிகழ்கால தோற்றத்தில் மனிதனின் நிறமும் வடிவமும் இல்லாது வெறும் கற்பனைச் சுவரில் ஏந்தி நிற்கும் சித்திரம் போல் இலக்கியம் உருபெறுவதில்லை. இலக்கியத்தின் பாடுபொருள், வாழ்க்கையின் அனுபவம் சார்ந்தே விளங்குதல் வேண்டும். அனுபவிக்காத பொருள்களை தன்னுடைய வசனத்திலோ அல்லது கவிதையிலோ காணவியலாது. அனுபவம் சாராத போலி விடயங்கள் எப்போதும் பேரிலக்கியமாகவும் ஆவதில்லை. ஒரே வரியில் சில நேரங்களில் வாசகனின் உள்ளத்தில் பளிச்சிட வைக்கும் வகையில் பொருளையோ அல்லது காட்சியையோ படைத்துக்காட்டும் பண்பு சங்கக்காலப் புலவர்களைச் சார்ந்ததாகும். தமக்குத் தெரியாத காட்சிகளை தங்களின் பாடல்களில் அவர்கள் காட்டியது கிடையாது. இயற்கையை நேரிடையாகக் கண்டு உணர்ந்தவற்றையே பாடும் இயல்புடையோர்கள் அவர்கள்!

         பாலைநிலம் பாடிய பெருங்கடுங்கோ நெய்தலைப் பாடவில்லை. நெய்தலைப்பாடிய அம்மூவனார் குறிஞ்சியைப் பாடவில்லை. குரிஞ்சியைப் பாடிய கபிலர் மருதநில வாழ்க்கையைப் பற்றி பாடவில்லை. சொந்த அனுபவங்களை மட்டுமே அடித்தளமாக்கி, அதீத கற்பனைகளிடம் அடைக்கலம் தேடாமல் இயற்கையோடு இயைந்து மண்ணின் மணத்தைப் பாடியதால்தான் அவர்களுடைய பாடல்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் நிலைத்திருக்கின்றன.

         கவிதை ஒரு மோகனக் கனவாக பாரதிக்கு என்றும் பட்டதில்லை. வாழ்க்கையின் இரகசியமறிந்து அதன் முன்னேற்றத்தைக் காண விழையும் கருவியாக மாற்ற விழைந்தவனே அவன். பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை போன்றவற்றை பொறுத்தி வடித்தவன் அவன். இலக்கியத்தில் நேர்மைதான் பாரதிக்கு முக்கியம்.  அது கவிதையானாலும், வசனமானாலும் நேர்மை துலங்க நடக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய எதிர்பார்ப்பு. உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் கை தானாகவே நேரான எழுத்தெழுதும் என்கிறான்! ஒரு நல்ல கவிதை எப்படி அமைய வேண்டும் என்பதில் அவனுக்குத் தனி பார்வை இருந்தது.

கள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல
காற்றையும் வானவெளியையும் சேர்த்து
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் – பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

- எனும் கவிதையில் கள்ளின் இன்பமும் மயக்கமும் கலக்க வேண்டும். அது தீயைப் போல் உள்ளத்து உணர்ச்சிகளை சூடேற்றி, சமூகத்தில் தீமைகளை அழிக்கும் சக்தியாக உருவெடுக்க வேண்டும்; காற்றைப் போல் குளிர்ந்தும் கட்டற்றும் சுதந்திரமாக இயங்க வேண்டும்’ எல்லாவற்றையும் உள்ளடக்கி, எல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் வானவெளியைப்போல் திகழ வேண்டும் என்ற பாரதியின் பார்வை எவ்வளவு அற்புதமானது!