மனிதனோடு மறந்திருக்கும் உண்மைகள் !

Posted by Justin Jeevaprakash | | Posted On Friday, March 3, 2023 at 5:13 PM


இரகசியம் என்பது என்றுமே நிரந்தரம் இல்லாத ஒன்றாகக் காலத்தின்  பிரசவத்தில் அவ்வப்போது பிறக்கின்றது.  ஒவ்வொரு     இரகசியமும்    சரியான     நேரம், இடம்,  மற்றும்  சரியான  மனிதருக்காகக் காத்திருக்கிறது. அறிவியல் உலகிலும் இப்படித்தான்; சமய உலகிலும் இப்படித்தான். அகநிலை அறிவியல் பற்றியும், உள்ளார்ந்த மனித விஞ்ஞானம் பற்றியும் பல நாடுகளில் நடந்துள்ள ஆய்வுகளைப் பார்க்கும் போதும் மனம் திகைத்துதான் போகிறது. நம்மிடத்தில் ஒரு சாவி இருக்கிறது. அந்தச்  சாவியிலிருந்து  அதன்  கருவூலத்தைத் திறந்து காணலாம் என்பதையும் கற்பனை  செய்ய  வழியில்லை. செல்வம் இருப்பதற்கான அடையாலம் எதுவும் சாவியில் இல்லை. சாவியே ஒரு பூட்டாக மூடிக்கிடக்கிறது   என்கிறார் ஓஷோ. ஆம் அந்தச் சாவியை துண்டு துண்டாக உடைத்தாலும் அது உலோகம் என்று தெரியுமே தவிர, அதிலிருந்து வெளிப்படப் போகும் செல்வம் என்னவென்று அறிந்து கொள்ள முடியாது.  எந்த விதமான குறிப்பும் இல்லாத சாவி ஒன்றை, நெடுங்காலம்             வைத்திருப்பது        வெறும்          சுமையாகவே ஆகிவிடும்.
இந்த சுமையை  நம்முடையே    பலர்  
வைத்துக்            கொண்டுதான்       உலா        வந்து கொண்டிருக்கிறோம். 
இருந்தும்    அதை  தூக்கி     எறிந்துவிடும்    எண்ணம் நமக்கு ஏற்படவில்லை காரணம் ஒரு பூட்டை என்றாவது ஒரு நாள் அது திறக்கக்கூடும் என்ற நம்பிகை! இந்தத் தேடலின் கண்டுப்பிடிப்புதான் இன்றைய நம் உலகம். பல சாவிகலால் திறக்கப்பட்டு கட்டவிழ்க்கப்பட்ட ஒரு மாபெரும் சக்திதான் இன்றைய உலகம்  என்று கூறினால் அது சொல்லத்தகுந்தது. மனிதன் ஆதியிலிருந்து இன்று வரை தனது விடாமுயற்சியாலும் திருப்தியின்மையாலும் தனது தேடலின் முடிவாலும் நாளுக்கு நாள் அதிநவீன மாற்றங்களைக் கண்டுப்பிடித்து வருகிறான்.  இதற்கு காரணம் தான் வைத்திருந்த சாவிக்கு ஏற்ற பூட்டைக் கண்டுப்பிடித்ததால். சில சமயங்களில் தான் வைத்திருந்த சாவிக்கு ஏற்ற பூட்டை கண்டுப்பிடிக்காமல் போவதும் உண்டு. ஆனால் அது தொடர் முயற்சியாக ஆடுத்தவரின் தேடலுக்கு உட்பணிந்து போவதும் உண்டு. இதுவே பல கண்டுப்பிடிப்புகளின் பரினாமம் என்று கூறவே விரும்புகிறேன். எந்த அளவிற்கு   நாம் நம்முடைய  எண்ணத்தையும்  சொல்லையும் செயலையும் செயலாக்கத்திற்கு கொண்டு வருகிறோமோ  அந்த அளவிற்கு  நம்மால் வெற்றியடைய முடியும். முடியாது முடியாது என்பவனும் , அது இல்லை, இது இல்லை என்பவனும் மரக்கட்டைக்கு ஒப்பானவன் என்கிறார் ஒரு பிரஞ்ஜு அறிஞர். உலகில் உள்ள அனைத்தும் நம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும்   அமைந்துள்ளது. அது போல ஒரு மனிதனின் உயர்வும் தாழ்வும் அவனின் நம்ப்பிக்கையின் அடிப்படையிலும்  விடாமுயற்சி எனும் தொடர் செயலாலும் நடைப்பெறுகிறது.   அவற்றைப்  பயன்படுத்தி   வாழ்க்கையில் எது வேண்டுமோ அதை நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும்   செயல்பட்டு   நம்மிடம் இருக்கும் சாவிக்கான பூட்டைத் தேடிக் கண்டுப்பிடிப்போம்!  நன்றி.

தொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்

Posted by Justin Jeevaprakash | | Posted On Monday, February 27, 2023 at 3:45 PM


மொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன் வடிவமாக உள்ள இலக்கணமும் அதன் தொடக்கத்திலிருந்து இலக்கியத்தோடு இணைந்திருந்ததினால் மொழியியல் இலக்கியத்தோடு நெருக்கம் கொண்டிருப்பது உண்மையாகிறது. பரந்த நோக்கில் பார்க்கும்போது, மொழியியல் என்பது மனிதனால் பேசப்படும் மொழியைப்பற்றி ஆராய்யும் ஒரு துறையாகும். மொழியியலைப் பற்றி நம் தமிழ் ஆய்வலர்களில் ஒருவரான இளம்பூரணர், தொலகாப்பியம் உணர்த்தும் மொழியியல் கூறுகளே தமிழின் வளர்ச்சியையும் அதன் ஒலிக்கூறுகள் மற்றும் மொழிக்கூறுகளின் அமைப்புகளையும் விளக்கப்படுத்துகிறார். தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் தொல்காப்பியம்என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். இதுவே தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.

(மூலம் :ta.wikipedia.org )

     தொல்காப்பியம் மூன்று அதிகாரங்கள் கொண்டதாகும் முதலாவதாக உள்ளது எழுத்ததிகாரம். இதில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவதாக உள்ளது  இயல் மொழிமரபு. மொழி எனப்படுவது நாம் மேலே பார்த்ததுப்போல் பேசப் பயன்படகூடிய ஒரு சாதனமாகும். அதற்கு நாம் எழுத்து வடிவமும் உருவாக்கிக் கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவதே சொல்லாகிறது. எனவே இங்கு    மொழி எனப்படுவது மொழியப்படும் சொல்லைக் குறிப்பதாகிறது. மரபு என்பதோ இவ்விடத்தில் பின்பற்றும் வழக்கத்தை குறிப்பனவையாகும். ஆகவே, முதலாவது இயல் முதலெழுத்துகளை விளக்கப்படுபவையாகவும் இரண்டாவது இயல் சார்பெழுத்துக்கள், மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்களை விளக்கப்படுத்துபவையாகவும் விளங்குகிறது. இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரங்களும் ஒன்பது இயல்கள் கொண்டதாகும். எழுத்ததிகாரத்துக்குள் நூன் மரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்கள் அடங்குகின்றன:::

எழுத்ததிகாரம்

எழுத்ததிகாரத்தில் தொல்காப்பியர் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடைகளைத் தருபவனாக எழுத்ததிகாரம் விளங்குகிறது என்கிறார்ர்.

1.       எழுத்துகள் எங்ஙனம் பிறக்கின்றன?

2.       சொற்கள் பிற சொற்களோடு எங்ஙனம் புணருகின்றன?

3.       புணரும்போது சொற்கள் எங்ஙனம்  மாறுகின்றன?

4.       பெயர்சொற்கள் வேற்றுமை உருபுகளை எங்ஙனம் ஏற்கின்றன?

5.       அவற்றை ஏற்கும்போது எங்ஙனம் வேறுபடுகின்றன?

6.       சாரிகைகள் எவ்வாறு அமைகின்றன?

7.      உயிரையும் மெய்யையும் ஈறாகக் கொண்ட சொற்கள் பிறச்சொற்களோடு கலக்கும்போது இடையில் என்ன எழுத்துகள் மிகுகின்றன?

8.      குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்போது எத்தகைய மாறுதல்கள் அடைகின்றன?


எழுத்து என்ற பிரிவில் தனிநின்ற எழுத்து, சொல்லிடை வரும்போது அவ்வெழுத்தின் நிலை, எழுத்துக்களின் உச்சரிப்பு நிலை, சொற்களின் எழுத்துக்கள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் புணரும்போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அ. எழுத்துக்களின் வகைகள்

   எழுத்து எனப்படுப,
     அகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது என்ப


விளக்கம் : உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் சேர்ந்து, முப்பது எழுத்துக்கள் ஆகும்.

      ஔகார இறுவாய்ப்,
    பன்னீர் எழுத்தும் உயிர்என மொழிப.


விளக்கம் : பிற ஒலிகளின் துணை இல்லாமல் தாமே இயங்கிக் கொள்வது உயிர் எழுத்துக்களாகும். அவை மற்ற மெய்யெழுத்துகளையும் இயக்க கூடியது. நம்முடைய உயிரைப் போல, தானே இயங்கவும், இயக்கவும் செயல்படுகின்ற காரணத்தாலும், அ முதல் ஔ வரை உயிரெழுத்து எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என தொல்காப்பியர் கூறுகின்றார்.

       னகார இறுவாய்ப்
     பதினெண் எழுத்தும் மெய்’. என மொழிப.


விளக்கம் : தன்னால் இயங்க முடியாது. பிற உயிர் ஒலிகளின் துணை கொண்டே இயங்க வல்லதாகும். நம்முடைய உடம்பினைப் போல, தானே இயங்கவும் இயக்கவும் முடியாத காரணத்தால் இதற்கு மெய்யெழுத்து எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என தொல்காப்பியர் கூறுகின்றார் அவை க், ச்,ட், த், ப், ர், ய், ற், ல், வ், ழ், ள், ங், ஞ், ந், , ம், ன் -  எனப் பிரிக்கப்பட்டு மெய்யெழுத்துக்களாக கருதப்படுகிறது. சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையாகும். அவை, குற்றியலிகரம், குற்றியலுகரம் மற்றும் ஆய்தமாகும். இவற்றே சார்பெழுத்துக்கள் எனவும் கூறுகிறார்.

ஆ. எழுத்துகள் பிறக்கும் விதம் (ஒலிகளின் பிறப்பு)


                தமிழில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் தொல்காப்பியரோ தம்முடைய தொல்காப்பிய இலக்கண நூலில் உள்ள பிறப்பியல்இலக்கணத்தைப் பற்றி  கூறுகின்றார். உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருத்தி, உதடு, நாக்கு, பல், மேல்வாய்(அண்ணம்) ஆகியாவையின் இயக்கங்களினால் வெவ்வேறு ஒலிகலாய் பிறக்கின்றன என்ற இவர் கூறும் பிறப்பு இலக்கணம் இன்றைய மொழியியலார் பெரிதும் போற்றுகின்றனர். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் ஒலிகளின் பிறப்பை ஆராய்ந்து பார்க்கும்போது தொல்காப்பியர் பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறப்பியலில் சொன்ன கருத்துக்கள் பெரும்பாலும் ஒத்துப் போவனவாகவே உள்ளன. தொல்காப்பியர் தனது இலக்கண நூலில்:-

        உந்தி முதலா முந்து வளி தோன்றி,
       தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,
       பல்லும், இதழும், நாவும், மூக்கும்,
       அண்ணமும், உளப்பட எண் முறை நிலையான்
       உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி,
       எல்லா எழுத்தும் சொல்லும் காலை,
       பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
       திறப்படத் தொ¢யும் காட்சியான.

என்ற நூற்பாவில் ஒலிகலின் பொதுப்பிறப்பு இலக்கணம் கூறுகிறார். இந்நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர், ‘’ தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் பிறப்பினது தோற்றரவைக் கூறுமிடத்து, கொப்பூழ் அடியாகத் தோன்றி முந்துகின்ற உதானன் என்னுங் காற்றுத் தலையின்கண்ணும் மிடற்றிகண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலப்பெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் என்ற ஐந்துடனே, அக்காற்று நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங்கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையோடு கூடிய உறுப்புகளோடு ஒன்றுற்று இங்ஙனம் அமைதலானே, அவ்வெழுத்துகளது தோற்றரவு வேறுவேறு புலப்பட  வழங்குதலை உடைய’’ என்று கூறுகின்றார். கொப்பூழ் அடியில் உதானன் என்ற காற்றுத் தோன்றி வருகின்றது என்பது இன்றைய அறிவியல் ஆராய்ச்சிக்கு மாறானது. நெஞ்சில் உள்ள சுவாசப்பையில் இருந்தே காற்ருப் புறப்படும். அக்காற்று மிடற்றின் ஊடகச் சென்று வாய்க்கு அல்லது வாய்க்கும் மூக்குக்கும் வருகின்றது என இன்றைய மொழியியலார்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இக்காற்றானது தலைக்கும் செல்கிறது எனக்கூறும் தொல்காப்பியர், தலை என்று கூறியிருப்பது எதைப்பற்றி எனத் தெரியவில்லை. ஆனால் தலைக்கு இக்காற்றுச் செல்வதில்லை என்கின்றனர் இக்கால மொழியியலாளர்கள். தொல்காப்பியர் உயிரெழுத்துகளின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது, ‘பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்என்று கூறுகிறார். இதனை அவர்;

           அவ் வழி,
           பன்னீர்-உயிரும் தம் நிலை தி¡¢யா,
           மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.

என்ற நூற்பாவில் குறிப்பிடிகின்றார். எனவே, உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியரும் இக்கால மொழியியலார்களின் கருத்துகளும் பெருதும் ஒத்தே காணப்படுகின்றன. எனலாம்.

இ. எழுத்துக்களின் அளவு

        எழுத்துகளின் அளவு (மாத்திரை) பற்றிய கருத்துகளிலும் இலக்கண நூல்களிடையே சில வேறு பாடுகள் இருந்தே வருகின்றன. குறில் 1, நெடில் 2, மெய், ஆய்தம், குற்றியலிகரம் மற்றும் குற்றியலுகரம் ஆகியவை 1/2 மாத்திரை எனும் அளவுகளில் வேறுபாடில்லை. உயிரளபெடையைத் தொல்காப்பியர் நெடிலும் குறிலும் சேர்ந்த இணைப்பாகக் கருதுகிறார். பின் வந்த நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் அதனைத் தனி எழுத்தாகக் கொண்டு இரண்டு மாத்திரைக்கும் அதிகமான அளவு பெறும் எனக் கூறுகின்றன. மேலும், ஒற்றளபெடை 1 மாத்திரை பெரும் எனக்கூற, தொல்காப்பியரோ ஐகாரக் குறுக்கம் ஒரு மாத்திரை பெறும் என்கிறார். ஒரு மாத்திரையாக ஒலிப்பதுதான் நிலைப்படி சரியானது என இன்றைய மொழிநூலார்களும் கூறுகின்றனர். ஔகாரக் குறுக்கம் பற்றித் தொல்காப்பியர் கூறவில்லை. நன்னூல் இலக்கண விளக்கமும் முத்து வீரியமும் அவை 1 மாத்திரைப் பெறக்கூடியது எனவும் வீரசோழியம் மற்றும் நேமிநாதம் ஆகியவை 1 1/2 மாத்திரை பறும் எனவும் குறிப்பிடுகின்றன. மொழியியலார்கலோ ஔகாரக் குறுக்கம் என ஒன்று இல்லை என்றே கருதுகின்றனர். மீண்டும் இங்கு தொல்காப்பியரின் கருத்தே உறுதிப்படுகிறது.


   


            

ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்? – பாரதி ஒரு பார்வை!

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, January 12, 2023 at 9:07 PM

         கவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கூடு விட்டு கூடு பாய்தலுக்கு ஒப்ப ஏற்றுணர்வும் உடையவனாக ஒரு கவிஞன் இருக்க வேண்டும் என்பதே பாரதியின் கொள்கையாகும் என்கிறார் அ.அ. மணவாளன். பிறரது துன்பத்தைக் காணும் போது தனக்கே நேர்ந்தாற் போல் உண்மையான கவிதையைப் படைக்கக்கூடியவனாக இருப்பான் கவிஞன். அதுவே, யாப்பிலக்கணம் படித்துக் கவிதை எழுதக்கூடியவன் பதங்களோடு அவற்றைப் பின்னும் திறன் படைத்தவனாக இருக்கக்கடவான் எனும் பாரதியின் கருத்தை அறியும்போது அவனுடைய கவிதைக் கொள்கையின் ஆதர்சம் எதுவென எளிதில் புரிந்து கொள்ளலாம். பிறர் துயரைக் களைவதுதான் அந்த மாகவியின் இலக்கிய நோக்கமாகும்.

          நிகழ்கால தோற்றத்தில் மனிதனின் நிறமும் வடிவமும் இல்லாது வெறும் கற்பனைச் சுவரில் ஏந்தி நிற்கும் சித்திரம் போல் இலக்கியம் உருபெறுவதில்லை. இலக்கியத்தின் பாடுபொருள், வாழ்க்கையின் அனுபவம் சார்ந்தே விளங்குதல் வேண்டும். அனுபவிக்காத பொருள்களை தன்னுடைய வசனத்திலோ அல்லது கவிதையிலோ காணவியலாது. அனுபவம் சாராத போலி விடயங்கள் எப்போதும் பேரிலக்கியமாகவும் ஆவதில்லை. ஒரே வரியில் சில நேரங்களில் வாசகனின் உள்ளத்தில் பளிச்சிட வைக்கும் வகையில் பொருளையோ அல்லது காட்சியையோ படைத்துக்காட்டும் பண்பு சங்கக்காலப் புலவர்களைச் சார்ந்ததாகும். தமக்குத் தெரியாத காட்சிகளை தங்களின் பாடல்களில் அவர்கள் காட்டியது கிடையாது. இயற்கையை நேரிடையாகக் கண்டு உணர்ந்தவற்றையே பாடும் இயல்புடையோர்கள் அவர்கள்!

         பாலைநிலம் பாடிய பெருங்கடுங்கோ நெய்தலைப் பாடவில்லை. நெய்தலைப்பாடிய அம்மூவனார் குறிஞ்சியைப் பாடவில்லை. குரிஞ்சியைப் பாடிய கபிலர் மருதநில வாழ்க்கையைப் பற்றி பாடவில்லை. சொந்த அனுபவங்களை மட்டுமே அடித்தளமாக்கி, அதீத கற்பனைகளிடம் அடைக்கலம் தேடாமல் இயற்கையோடு இயைந்து மண்ணின் மணத்தைப் பாடியதால்தான் அவர்களுடைய பாடல்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் நிலைத்திருக்கின்றன.

         கவிதை ஒரு மோகனக் கனவாக பாரதிக்கு என்றும் பட்டதில்லை. வாழ்க்கையின் இரகசியமறிந்து அதன் முன்னேற்றத்தைக் காண விழையும் கருவியாக மாற்ற விழைந்தவனே அவன். பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை போன்றவற்றை பொறுத்தி வடித்தவன் அவன். இலக்கியத்தில் நேர்மைதான் பாரதிக்கு முக்கியம்.  அது கவிதையானாலும், வசனமானாலும் நேர்மை துலங்க நடக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய எதிர்பார்ப்பு. உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் கை தானாகவே நேரான எழுத்தெழுதும் என்கிறான்! ஒரு நல்ல கவிதை எப்படி அமைய வேண்டும் என்பதில் அவனுக்குத் தனி பார்வை இருந்தது.

கள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல
காற்றையும் வானவெளியையும் சேர்த்து
தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் – பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

- எனும் கவிதையில் கள்ளின் இன்பமும் மயக்கமும் கலக்க வேண்டும். அது தீயைப் போல் உள்ளத்து உணர்ச்சிகளை சூடேற்றி, சமூகத்தில் தீமைகளை அழிக்கும் சக்தியாக உருவெடுக்க வேண்டும்; காற்றைப் போல் குளிர்ந்தும் கட்டற்றும் சுதந்திரமாக இயங்க வேண்டும்’ எல்லாவற்றையும் உள்ளடக்கி, எல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் வானவெளியைப்போல் திகழ வேண்டும் என்ற பாரதியின் பார்வை எவ்வளவு அற்புதமானது!









மொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்?

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, November 17, 2022 at 10:52 AM

             கல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேரிடும் குறைகள் ‘கல்வி’ எனும் துறை முழுவதும் பரவியுள்ளதை உணர முடிகிறது. பல அறிஞர்கள் கல்வியைப்பற்றி கூறும் குறைகள் யாவும் கற்பித்தலிலிருந்தே எழுகின்றன. கல்வித் துறையில் தொழில் நுட்பம் எத்துணையளவு ஆராய்ச்சிகளால் வளர்ந்திருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறுதான் பணியாற்ற வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் கற்பித்தல் எனும் தம் குறிக்கோளில் எவ்வளவு உயரம் உயர்ந்திருக்கின்றார் என்று அளவிடுதலை விடத் தம்முடைய மாணவர்களை ஆசிரியர் எவ்வளவு உயர்த்திருக்கிறார் என்று அளவிடுதலே சிறந்தது.
                மொழியியல் சம்மந்தமான பாடங்களான தமிழ், மலாய் , ஆங்கிலம், சீனம் என்பது இந்நாட்டில் மொழிப்பாடங்களில் தலையானதாகக் கருதப்படுகிறது. இவைகள் அனைத்தும் முதன்மை பாடங்களாகவும் சார்புப் பாடங்களாகவும் தமிழ், சீன, மலாய் , ஆங்கிலப் பள்ளிகளில் போதிக்கப்படுகின்றன. தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் 6 ஆண்டு காலமாகத் தமிழை முதன்மைப் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றனர். இப்படி மொழிப்பாடங்களைக்க் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பலவகையான இலக்கன இலக்கிய அறிவு அத்தியாவசியமான் ஒன்றாகத் திகழ்கிறது. அதுமட்டுமின்றி ஆசிரியருக்கு மொழியைப் பற்றிய நல்ல ஒரு தெளிவும் முறையான புரிதலுமே ஒரு சிறந்த மொழியில் அறிவைப் பெறக்கூடிய மாணாக்கணை உருவாக்க முடியும்.

              மொழிக்கற்றல் கற்பித்தல் என்பது வகுப்பறை மற்றும் வகுப்பறைக்கு வெளியும் நடைபெறக்கூடிய ஒரு தொகுப்பாகும். இந்த நிகழ்வின் போது மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் பல திறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் ஆசிரியர் தான் போதிக்கக் கூடிய மொழியில் நல்ல பேச்சாற்றலைக் கொண்டிருப்பது மிக அவசியமாகும். அப்படி, தான் போதிக்கக் கூடிய மொழியில் ஆசிரியருக்கு புலமை இல்லாமையாலும் போதிய திறம் இல்லாமையாலும் போதிப்பதைத் தவிர்ப்பது நலம். காரணம் இது மாணவர்களுக்கு ஒரு பெரிய பாதிப்பும் அப்பாடத்தின் மீது நாட்டத்தைக் குறைக்கவும் வழிச் செய்யும். ஆகவே ஆசிரியர் எப்போதும் தான் போதிக்கவிருக்கும் மொழியை மாணவர்களுக்கு நன்கு கற்பிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றப்பிறகே போதித்தல் ஒரு தரமான கற்றல் கற்பித்தல் நிலையை ஏற்படுத்தும். ஆகவே, ஆசிரியர் எப்போது தான் பயிற்றுவிக்கும் மொழியை முதலில் தெளிவாகவும் இலக்கண பிழயின்றி பயன் படுத்தக்கூடிய திறனையும் கையாள்வது அவசியமான ஒன்றாகும்.

                  ஓர் ஆசிரியர் வகுப்பின் முன் போதிக்கும்போது, அவர் மொழியைக் கையாளும் முறையே மாணவனை அவரின் கட்டுப்பாட்டிட்குள் வைக்கும் முதல் ஆயுதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் போதனையை கேட்கும் மானவனும் எவ்வித தடங்களும் இன்றி தனக்குள் ஏற்படுகின்ற தேடலை முறையே உள்வாங்கிக் கொள்வான். அதுமட்டுமின்றி நல்ல மொழியைப் பேசக் கூடிய ஆற்றலையும் பயன்படுத்தக்கூடிய முறையையும் எவ்வித கலப்பு மொழிகளின்றி அவனாலும் சிறு வயது முதலே பயன்படுத்தவியலும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் உள்ள நாப்பழக்கம் என்பது வாய்மொழிப்பயிற்ச்சியைக் குறிக்கும். கைப்பழக்கம் எனபது எழுத்து மொழிப் பயிற்ச்சியை குறிக்கும். ஒரு மாணவனுக்கு மட்டுமல்லாது ஓர் ஆசிரியருக்கும் தொடர்ந்த பயிற்சி இல்லையென்றால் மொழியைக் கையாள்வதில் முழுமை ஏற்படாது.

            எனவே, தன்னுடைய சுய ஆற்றலை வளர்த்துக் கொள்ள மொழியியல் ஆசிரியர்கள் தங்களின் துறைச்சார்ந்த பாடத்தில் காலத்திற்கேற்ப தன்னை மேல்நோக்கிக் கொள்வதில் குறியாக இருத்தல் வேண்டும். இதற்கு வாசிப்பு முக்கியப்பங்காற்றுகின்றது என்றால் அது மிகையாகாது. இந்த நவீன யுகத்தில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய துறைச்சார்ந்த அறிவைப் பெறுவதற்கு இணயத்தைக் கையாள்வதில் கைத்தேர்ந்தவராக இருத்தல் மிக அவசியமாகும். இணையத்தின் வாயிலாக மொழியைக் கற்பவர்கள் பல கருத்து பரிமாற்றம் செய்வதன் மூலமாகவும் உலகளாவியத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். குறிப்பாக என்னைப் போன்று தமிழ் மொழி போதிக்கின்ற ஆசிரியர்களுக்கு இன்று உலகளாவிய நிலையில் தமிழ் மொழியைப் கற்பிப்பதற்கு தமிழ் நாட்டு அரசு, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடக்கி நடத்தி வருகிறது. இதில் ஆசிரியர் தங்களையும் தங்கள் தரத்தையும் போதனா முறைகளையும் மேம்படுத்திக் கொள்ள தமிழில் சான்றிதழ், பட்டயம், பட்டம், பட்ட மேற்படிப்பு முதலானவைகளை முறையே மலேசியாவிலிருந்தே இணையத்தின் வாயிலாகவே மேற்கொள்ளலாம்.

             மேலும், ஆசிரியர்கள் தாங்கள் மாணவர்களைப் பரீட்சைக்காகத் தயார்படுத்தும் ஒரு கருவியாக செயல்படுகின்ற ஒரு இயந்திரத்தன்மையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்தே ஆக வேண்டும். பிற பாடங்களைக் காட்டிலும் மொழிப்பாடங்களுக்கு இந்த எண்ணம் ஒரு பேரபாயத்தை ஏற்படுத்தும். தற்போதைய அவசரக் கல்விச் சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களை பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற அனுமானங்களின் அடிப்படையில் போதிப்பது மாணவர்களின் சிறப்புத் தேர்ச்சியை மாணவர்களின் எண்ணிக்கையில் காட்டுமே தவிர, அவர்களின் தரத்தில் காட்டுவதில்லை. இச்செயல்கள் மாணவர்கள் பரீட்சையில் மதிப்பெண்கள் பெறக்கூடிய எண்ணத்தைத்ததன் முன்நிறுத்துமே தவிர, அவர்களின் மொழியியல் அறிவை அடைந்தனரா என்பது மிகப் பெரிய ஒரு கேள்விக்குறிதான்.

                  ஆகவே, மொழிப்பாடங்களைப் போதிக்கின்ற மொழியியல் ஆசிரியர்கள், மொழியியல் சார்ந்தவைகளை வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், மொழியறிவுடன் போதிக்கக் கூடிய ஆற்றலை மாணவர்களுக்கு போதிக்க தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்குள் கலந்துரையாடல் இதற்கு மிக முக்கியமாகத் திகழ்கிறது. ஆசிரியர்கள் அவ்வப்போது ஒன்று கூடி, தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, இலக்கண இலக்கியங்களை மாணவர்களின் தரத்திற்கேற்றவாரும் மொழிவிளையாட்டுகள் மூலமாகவும் செம்மைப் படுத்திக் கொண்டால், மொழியியல் குறைகளை ஆசிரியர்களிடமிருந்து மட்டுமல்லாமல் மாணவர்களிடமிருந்தும் குறைத்து விடலாம்.

               இறுதியாக, ஆசிரியர் தங்களின் அறிவுப் புலமை மட்டுமின்றி, மாணவர்களின் அறிவுப் புலமையையும் செம்மைப் படுத்த வேண்டும். மொழியின் இலக்கண மரபுகளை நன்கு அறிந்தவரால்தான் மொழியைப் பிழையின்றி பேச முடியும். மனதில் தோன்றும் எண்ணங்களைப் பிறர் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூற முடியும். இன்றைய உலகில் இதழியல் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது.பலதரப்பட்ட பிரிவினர்களும் செய்தி ஏடுகளை வெளியிடத் தொடங்கி விட்டனர். அவ்வேடுகளை வாங்கிப் படித்தால் அதிகமான ஒற்றுப் பிழைகளும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால் இலக்கணத்தை முறையாகவும், நிறைவாகவும் கற்றல் வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் கற்றல் சிறப்படையும். மொழி செம்மையுறும்.



குமரிக்கண்டம் ஓர் ஆய்வு....! (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!)

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, October 13, 2022 at 11:30 PM


            குமரிக்கண்டம்! நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவியலவில்லை.ஆனால், இதனையொட்டி சில உண்மைகளை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும். குமரிக்கண்டமே தமிழனின் வரலாற்றின் ஆரம்பம் என்றும் கூறலாம். கடல்கோள்களால்  குமிரிக்கண்டம்  அழிவை எதிர் நோக்கியுள்ளது என்று அறிஞர்களும் கூறுகின்றனர். இவ்வழிவு கட்டம் கட்டமாக நிகழ்ந்திருப்பதாக நிலநூல் வல்லார்கள் தங்களது ஆராய்ச்சியில் நிரூபித்தும் வருகின்றனர்.  இதனையொட்டி  'ஸ்காட் எலியட்' (W.Scott Elliot)  என்பவரின் கருத்தினை சிந்திக்கவே வேண்டும். இவர் பதினாறாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் முதல் கடல் பெருக்கு  ஏற்பட்டதாகவும்,  மூன்றாவது  கடல் பெருக்கு இருநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகவும்,  நான்காவது கடல் பெருக்கு  எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிவை ஏற்படுத்தியதாகவும், ஐந்தாவது கடல் பெருக்கு கி.மு 9564இல் ஏற்பட்டதாகவும்  தனது ஆராய்ச்சியில் குறிப்பிடுகின்றார். இக்கூற்றை ஒப்பீடு செய்து பார்க்கும் போது அட்லாண்டிக் கடல் பகுதியில் முன்பு ஒரு பூகம்பம் ஏற்பட்டு 'பொசிடோனியஸ்' எனும் தீவு கி.மு 9564இல்அழிந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதுவே  முத்தமிழ் செல்வனின் தமிழக வரலாற்றிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
                  குமரிக்கண்டம் குமரி முதல் ஆஸ்திரேலியா வரை பரந்து கிடந்ததாக கருதப் படுகிறது.இன்றைய இலங்கையும் உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்தனவாம். அதில்,வடமதுரை என்பதுதான் இதன் முதல் தலைநகர்.இங்குதான் முதல் சங்கம் இருந்தது.இங்குதான் அகத்தியர் தனது அகத்தியம் எனும் நூலை இயற்றினார்.இந்த சங்கம் என்ற சொல் குறிப்பிடுவது தமிழ்ச் சபையைக் குறிப்பிடலாம்.அல்லது இன்று united states of america 51 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பாக இருப்பது போல ஒரு Federation of 49 states ஆகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.அதன் பொது மொழியாக தமிழ் இருந்திருக்கலாம்.
               முதல் சங்கம் கடல் ஊழினால் அழிந்தது.அதை ஆண்ட பாண்டியர்கள் வடக்கே நகர்ந்து கபாடபுரம் வந்தார்கள்.கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரம் சொல்வது போல மறுபடி கொடுங்கடல் கொள்ள கடலே வேண்டாம் சாமி என்று இன்றைய மதுரையைத் தேடிப் பிடித்தார்கள்.அகத்தியர் இன்னும் நகர்ந்து கடல் கோளோ பூமி அதிர்வோ வராத இடம் என்று தேடி இன்றைய பொதிகை மலை வந்து சேர்ந்திருக்கலாம் .இங்கு தென்காசி அருகே உள்ள தோரணவாயில் மலையில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார் என்றும் சான்றுகள் பகரப்படுகின்றன. அது  ஒருவேளை புவியியல் ஆராய்ச்சிக் கூடமாகவும்  இருக்கலாம்.( நன்றி: அரவை அரன்.)
               நமது பூமியின் நிலப்பரப்பு ஒரே தட்டாக இல்லை.பல துண்டுகளாக ஒன்றோடு ஒன்று பொருந்தித்தான் இருக்கிறது.அவ்வாறு பொருந்தி இருக்கிற பிளவுக் கோடுகளில்தான்  பெரும்பாலும் பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாகவே  இப்பகுதிகளின் அடித்தளங்கள், எரிமலை அதிர்ச்சியினால்  மிக விரைவில் இரவு நேரத்தில் மறைந்து போனதாகவும் இந்நில வெடிப்பில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டதாகவும் மொத்தம் 64000000 மக்கள் அழிந்ததாகவும் , தொறானோ கையெழுத்துப் படிவத்தில் உள்ளது. இப்படிவம் 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிப்பதாகவும் , இன்றும் இலண்டனில் நூதனப் பொருட்காட்சி சாலையில் உள்ளது  என்றும்  'ஸ்காட் எலியோட்' கூறுகிறார். இதனைத் தொடர்ந்து பார்த்தோமானால், குமரி நாட்டின்  வடக்கு எல்லை  விந்திய மலையாக இருந்திருக்கிறது. இமயமலையும் சிந்து சமவெளிகளும் அப்போது  இல்லை. ஆகவே, குமரி நாடு ஆசியக்கண்டத்தின் ஒரு பகுதியாக இராமல் தனியான பெரு நாடாக நிலவி இருந்ததும், பிற்காலத்தில்  கடலுள் மறைந்துவிட்டதும் நாம் அறிதல் வேண்டும். குமரி நாட்டின் குமரி ஆறும் தெற்கே பஃதுளி ஆறும் அக்காலத்தில் ஓடிக்கொண்டிருந்தன என்பதை புறநானூற்றின் 9 ஆம் பாடலாலும் இதனை அறியலாம்.

தமிழனும் குமரிக்கண்டமும்: காணொளியைக் காண்க

            மேலும்,    குமரிக்கண்டம் ஒரு மிகப்பழமையான நிலப்பரப்பு. அங்கு தமிழன் தோன்றினான். அவனே உலகின் முதல் மனிதன். அவனே உலகின் அனைத்துப் பண்பாடுகளுக்கும் முன்னோடியான பண்பாட்டை உருவாக்கினான். தமிழிலிருந்தே அனைத்து மொழிகளும் தோன்றின. இவற்றையெல்லாம் பின்னாள்களில் வந்த ஆரியச் சதிகாரர்கள் மறைத்துவிட்டார்கள் என்றும்
 தேவநேயப் பாவாணர் முதல் அப்பாதுரைவரை முன்வைக்கும் சித்திரம் இதுதான். இதற்கும் சான்றாகக் குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்றும் இவ்வுலகில் தோன்றிய முதல் குரங்கு மனிதனே  பழந்தமிழ் நாட்டனாகத்தான் இருக்க முடியும் என்பதோடு விஞ்ஞானிகள்,  நில நடுக்கோடு எப்பகுதியில் செல்கிறதோ, அப்பகுதியிலே, ஆதி கரு உற்பத்தியாக முடியும் எனவும் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, சீனிவாச ஐயங்கரும்,   'பன்னெடுங் காலத்திற்கு முன் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காக் கண்டங்களை உள்ளிட்டு, நில நடுக்கோட்டுப் பகுதியில் நிலவிய லெமுரியா விலங்கியது. இப்பகுதியே, மக்களின் பிறப்பிடமாக இருக்கலாம். தென்னிந்தியாவில் தோன்றி வாழ்ந்த பழங்குடி மக்களின் சந்ததிமார்களே திராவிடர்கள்.'  எனக் கூறுவதும் இங்கு சான்றாகிறது.(நன்றி: முத்தமிழ் செல்வன்)


      ஒரு அறிவியல் புனைவு லாகவத்துடன் இதற்கு அப்பாலும் போகக்கூடிய கற்பனையாளர்கள் உண்டு. உதாரணமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘குமரி மைந்தன்’ எனும் ஆராய்ச்சியாளரைக் குறிப்பிடலாம். குமரிக்கண்டக்காரர்கள் வெறுமனே மூதாதைகள் மட்டுமல்ல. அறிவியல் வல்லுனர்கள். ஆகாய விமானங்களை அப்போதே கண்டுபிடித்தவர்கள். விண்வெளிப் பயணம் மேற்கொள்ளத்தக்க தொழில்நுட்பத் திறனாளிகள். உலகெங்கும் பறந்து பண்பாட்டைப் பரப்பியவர்கள். உலகின் மற்ற பாகங்களில் வாழ்ந்த பண்பாடில்லாத மக்களுக்குப் பண்பாட்டையும் தொழில்நுட்பத்தையும் இவர்கள் அளித்தமையால் இவர்களை அம்மக்கள் ‘கடவுள்களாக’ வணங்கினர் எனவும் கூறப்படுகின்றது.
             தொடர்ந்து, ஆதிமனிதன் மூதாதைகளுக்கு ஆஸ்திரேலா பிதகஸ்(குரங்கு மனிதன்) பிதகாந்தரப்பாஸ் (மனிதனின் மூதாதை). ஹோமா சாப்பியன் (ஆதிமனிதன்) என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கின்றனர். இந்துமாக் ஓரத்தில் இருக்கும் ஆப்பிரிக்காவிலும், ஜாவாவிலும் மனிதனின் மூதாதையர்கள் வாழ்ந்தனர் என்பதும் தெளிவாகிறது. இதற்கான சான்று (Burns Edward Mc And Philip Lee Ralph, World Civilization: From Ancient to Contemporary, Vol 1 ) ல் உள்ளது.
             அதுமட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும், குமரிக்கண்டத்தின் சான்றுகள்  பல காணவே படுகின்றன. இவற்றையெல்லாம் ஒப்பீடு செய்து பார்க்கும்போது,  பழந்தமிழ் நிலப்பகுதியே ஆதித் தமிழரின் தாயகம் என்ற முடிவுக்கு நாம் வருவதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. மேலும், ஆதி மூதாதை ஆதித் தமிழினத்தார் என்றே கூறவும் வேண்டும்.      தொடரும்....

(குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் யாம் படித்ததையொட்டியும், எந்தன் தேடலையொட்டியுமே அமைந்திருக்கிறது. பல மேற்கோள்களைக் கொண்டே செய்திகளை முன் வைத்துள்ளேன்.  இங்கு விடுப்பட்ட  விடயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. )
  

தமிழவேள் கோ.சாரங்கபாணி வாரம் - நாள் 3 (04-10-2012)

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, May 31, 2012 at 10:30 AM

      தொடர்ந்து, மூன்றாவது நாளான இன்று, மாணவர்கள் தங்களை அதிகமாகவே ஆர்வப்படுத்திக்கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.இன்றைய தினத்தில் மாணவர்களுக்கு மத்தியில் பட்டிமன்றம் நடத்தினேன். இப்பட்டிமண்றத்தை ஆசிரியை திருமதி அல்லியும் ஆசிரியை திருமதி சரோஜா தேவியும்எனக்கு சிறப்பாக      நடத்திக் 
கொடுத்தனர். இதில் நாங்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு, மற்றும் ஆறாம் ஆண்டு  மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் முப்பிரிவுகளாகப் வகுப்பிற் கேற்றவாறு பிரிக்கப்பட்டனர்.     இப்போட்டிகளில் மாணவர்கள் தலைப்பிற்கேற்ப கருத்துகளை திரட்டி வந்து பேசியது மிகவும் சுவாரிசியமாக இருந்தது. இதனை தொடர்ந்து இன்று மாணவர்கள்  கோலமிடும் போட்டியிலும் கலந்து கொண்டனர்.
               இப்போட்டியில் அனைத்து வகுப்பு மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.  நம் இனத்தின் பாரம்பரியயத்தில் ஒன்றான கோலமிடுதல், நம் இனத்தரிடம் குறைந்தே வருவது, நம் பாரம்பரியத்தின் அழிவை நோக்கிவிடுமமென்ற அச்சத்தில் இதையும் ஒரு போட்டியாக நிகழ்த்த வேண்டும் என்ற எனது தீர்மானத்தில் ஆசிரியர்கள் அனைவரும் உடன்பட்டனர். ஐந்து பேர் ஒரு குழுவாக ஒன்றாம் ஆண்டு வரை ஆறாமாண்டு வரையில் மாணவர்களுக்கு இடங்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டது.  மாணவர்கள் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த கோலங்களை குழுமுறையில் வரைந்து காட்டினர். அனுபவமே இல்லாத பல மாணவர்கள் முதல் முறையாகக் கோலம் வரைந்தாலும் மிகவும் அழகாகவே வரைந்தனர்.

கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 2 (03.10.2011)

Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, October 9, 2011 at 9:22 PM

         கோ.சாரங்கபாணியின் இரண்டாவது நாளான இன்று மாணவர்கள் கதைக்கூறும் போட்டியிலும் புதிர்போட்டியிலும் கலந்து கொண்டனர். ஓவ்வொரு ஆண்டிலும் மாணவர்கள் சுயமாகவும் ஆசிரியர் துணையுடனும் கதைகளை உருவாக்கிக் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கதைகளை முன் வைக்க வந்தாலும், பயத்தின் காரணமாக, குரல் நடுக்கத்துடன் கதைகளை ஒப்புவித்தது, பாராட்டக்கூடிய விடயம் என்றே கருதுகிறேன். இத்தகைய          பயம் மாணவர்களிடம் நாம் வளர்த்துவிட்டோமானால்         அது மாணவர்களிடம் பேச்சாற்றலை வளர்த்து 
விடாமல், அவர்களை தாழ்வுமனப்பான்மைக்குத் தள்ளிவிடுவதோடு, ஒரு சபைக்கு முன்னால் பேசும் ஆற்றலை இழந்தும் விடுவர் என்பது ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

கதைக்கூறும் போட்டியில் கலந்து கொண்ட ஒரு சில மாணவர்கள்...


           கதைக்கூறும் போட்டிக்குப் பிறகு, மாணவர்களுக்குப் பதிர் போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. மாணவர்கள் தமிழ், தமிழினம் தமிழர் பண்பாடு சம்மந்தமான கேள்விகள் அடங்கிய பதிர் போட்டியாக இது அமைந்தது. மாணவர்கள் தமிழ் அறிஞர்களையும் அவர்களின் போராட்டங்களையும் முன்பே அறிந்திருந்தது இப்புதிர்போட்டியில்  கலந்து கொள்ள அவர்களுக்கு ஆர்வமாக இருந்ததை அவர்களின் பங்கெடுப்பின் மூலம் அறிந்து கொண்டேன்
     மேலும் நமது பாரம்பரிய விளையாட்டுகளையும், தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளித்தது மட்டுமல்லாமல், தமிழ் பால் ஆர்வம் அடைந்து என்னையும் என் சக ஆசிரியர்களையும் மகிழ்வித்தது
என்றே கூறவேண்டும்.   இதன் வழி  என்னுடைய நோக்கம் நிறைவேறிற்று என்பதை என்னால் உணர முடிந்தது.இந்த இரு நிகழ்வுகளுடன் இன்றைய இரண்டாம் நாள் ஒரு நிறைவை எட்டியது.

தொடரும்.....