
கடந்த 14-11-2010ல் கணேசர் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுக்கு விருதளிப்பு விழா மிகவும் விமரிசையாக நடந்தேறியது. இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக ஐயா திரு.கெங்கையன் அவர்களும் செர்டாங் மாவட்ட இந்து சங்க செயலாளர் திரு. தங்கவேலு
அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்த விருதளிப்பு விழா எவ்வருடமும் காணாத அளவுக்கு இவ்வருடம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இவ்வருடம் மாணவர்கள் யூபிஎசார் தேர்வில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் சிறப்பாகத் தேர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் கூலிம் மாவட்ட ரீதியில் நடைபெற்ற கலை, கலாச்சார விழாக்களிலும் சிறந்த பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது பல கொடை நெஞ்சங்களைப் பள்ளியின் பக்கம்

ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி, இவ்வருடம் 6ஏ 1பி எடுத்த மாணவி
செல்வி புஷ்பா சங்கரன் சிறப்பு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் 5ஏ , 4ஏ, 3ஏ எடுத்த மாணவர்களும் சிறப்பு செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்,
பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறப்புத்
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் மலேசிய இந்து சங்க சார்பில், செர்டாங் மாவட்ட இந்து சங்க செயலாளர் திரு. தங்கவேலு அவர்கள் சிறப்பு செய்து சான்றிதழ் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியைத் திருமதி.யௌவனராணி அவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காகப் பாடுபடும்; பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைத்து நன்நெஞ்சங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நம் சமூகத்தின் வளர்ச்சிக்கு, நாம்தான் பாடுபட வேண்டும் எனக் கூறிக் கொண்டு, அனைவரின் ஆதரவையும் அடுத்தடுத்தாண்டுகளிலும் தேவை என்பதையும் தமது உரையில் தெரிவித்துக் கொண்டார்.
அதுமட்டுமின்றி, அன்றே பள்ளியில் 'தமிழ்விழி' எனும் மாணவர் படைப்பிலக்கிய இதழை வெளியீடு செய்தோம். இந்நிகழ்வு விருதளிப்பு விழாவில் ஓர் அங்கமாக நடந்தேறியது.
மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்கவும், நாளைய எழுத்தாளர்களாக அவர்கள் வளர்ந்து வரவும், இது அடித்தளமாக அமைந்தது. மேலும் இப்புத்தகத்தைப் பல நன்நெஞ்சங்கள் பள்ளியின் வளர்ச்சிக்காக நன்கொடையாக கொடுத்துப் பெற்றுக் கொண்டதும், மாணவர்களின் படைப்பிற்கு ஓர் அந்தஸ்த்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இவ்விதழ் வெளியீட்டிற்கு என்னோடு சேர்ந்து ஆசிரியர் திரு.வடிவேல் அவர்களும், ஆசிரியர் திரு. போகீர்த்தனன் அவர்களும், ஆசிரியர் திரு. சரவணன் அவர்களும், ஆசிரியைக் குமாரி. அன்னபூரணி அவர்களும் பணியாற்றினர் என்பதோடு, அவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.
.